சூரிய கதிரின் ஒளியை இழந்து தவிக்கிறோம் - கருணாநிதி மறைவுக்கு நடிகை நயன்தாரா இரங்கல்

கருணாநிதி மறைவுக்கு நடிகை நயன்தாரா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

Update: 2018-08-08 22:32 GMT
சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து, நடிகை நயன்தாரா இரங்கல் செய்தி வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தங்களுடைய இனமான தலைவனை இழந்து வாடும் ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்துக்கும் என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் இரங்கல் செய்தி இது. நம் வாழ்வில் மிகுந்த இருண்ட 24 மணி நேர சோதனை இது என சொல்லலாம். சூரிய கதிரின் ஒளியை இழந்து தவிக்கிறோம். நாம் காலத்தை வென்ற ஒரு எழுத்தாளரை, சிறந்த சொற்பொழிவாளரை, மிகச்சிறந்த அரசியல்வாதியை, நம் மாநிலத்தின் முகவரியான முகத்தை, இழந்து வாடுகிறோம்.

நம் மாநிலத்தின் குரலாக 75 ஆண்டுகளாக அவர் குரல் இருந்து வந்திருக்கிறது. அவர் ஆற்றி இருக்கும் சாதனைகள் எண்ணிலடங்காதவை. அவர் ஆட்சியில் இருக்கும் போது புரிந்த சாதனைகள் மறக்க முடியாதவை. அவர் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், தி.மு.க.வினருக்கும், பொதுமக்களுக்கும் இந்த மீளாத்துயரில் இருந்து மீண்டு வர என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

வெளியூரில் நடந்து வரும் படப்பிடிப்பு காரணமாக அவருடைய இறுதி ஊர்வலத்தில் நான் கலந்துகொள்ளாமல் போனதற்கு மிகவும் வருந்துகிறேன். இவ்வாறு நயன்தாரா கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்