பசுமை தீர்ப்பாய விசாரணையில் 2 அதிகாரிகள் இணைந்து பணியாற்ற முடியுமா? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

“ஸ்டெர்லைட் ஆலை குறித்து பசுமை தீர்ப்பாய விசாரணையின் போது, 2 அதிகாரிகள் இணைந்து பணியாற்ற முடியுமா?” என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2018-08-29 23:00 GMT
மதுரை,

நாகர்கோவிலை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக பணியாற்றி வந்த நசீமுதீன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சுற்றுச்சூழல் துறை செயலாளராகவும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷம்பு கல்லோலிகர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் திறமை வாய்ந்த அதிகாரியாக இருந்தாலும் கூட, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நசீமுதீனுக்கு இருக்கும் புரிதலும், அனுபவமும் புதிய அதிகாரிக்கு இருக்க வாய்ப்பில்லை.

இதற்கிடையே தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை குறித்த விசாரணை தொடங்க உள்ளது. இதனால் புதிய அலுவலர் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தகவல்களை படித்து, புரிந்து கொண்டு ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை உறுதிசெய்வது சாத்தியமில்லை. மேலும், அதிகாரிகள் பணியிட மாற்றத்தால் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பின்னடைவு ஏற்படும்.

எனவே, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தலைவராக இருந்த நசீமுதீனை இடமாற்றம் செய்து கடந்த 23-ந் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இணைந்து பணியாற்ற முடியுமா?

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஸ்குமார் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து ஆராயும் குழுவில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தலைவர் நசீமுதீன் இடம்பெற்றுள்ளார். அவருக்குத்தான் ஆலை தொடர்பான அனைத்து விவரங்களும் தெரிந்திருக்கும். அவரது பணியிட மாறுதல் என்பது தேசிய பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவது போல் உள்ளது” என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அதைதொடர்ந்து, தேசிய பசுமை தீர்ப்பாய விசாரணையின் போது, பழைய அதிகாரி நசீமுதீனும், புதிய அலுவலராக பொறுப்பேற்க உள்ள ஷம்பு கல்லோலிகரும் இணைந்து பணியாற்ற முடியுமா? என்று தமிழக அரசிடம் கேட்டு பதில் மனு தாக்கல் செய்யும்படி அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை வருகிற 3-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

மேலும் செய்திகள்