அண்ணா,ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்
முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். #PMModi #EdappadiPalaniswami #ADMK
சென்னை
சென்னை சென்ட்ரலுக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டவும், முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா மற்றும் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னனா விருது வழங்கவும் வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற தமிழக அமைச்சரவையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதேநேரம், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பெயரை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வைக்குமாறும் பரிந்துரை செய்யப்பட்டது. முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
உலக முழுவதும் வாழ்கிற 10 கோடி தமிழ் மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிற சமூக நீதி காத்த வீராங்கனை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க அமைச்சரவை ஒப்புதலுடன் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் பரிந்துரை செய்தது. அந்த கோரிக்கையை மீண்டும் மத்திய அரசுக்கு வலியுறுத்தவும் அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளார்.