விபத்தில் வலது கை பாதிப்பு: டாக்டருக்கு ரூ.82 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

அரசு பஸ் மோதி நடந்த விபத்தில் வலது கை முழுவதும் பாதிக்கப்பட்ட டாக்டருக்கு ரூ.82 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-10-13 22:15 GMT
சென்னை,

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் சரவண ரூபன் (வயது 40). இவர், கடந்த 2009 மார்ச் 18-ந்தேதி புதுச்சேரியிலிருந்து, மரக்காணத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது, வேகமாக வந்த தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான பஸ் அவர் மீது மோதியது. இதில் சரவண ரூபன் படுகாயமடைந்தார். அவரது வலது கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர் ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தமிழ்நாடு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மோட்டார் வாகன விபத்துகளை விசாரிக்கும் தீர்ப்பாயம், ரூ.67 லட்சத்து 99 ஆயிரத்து 350 இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது.

இழப்பீடு குறைவு

இதையடுத்து ஐகோர்ட்டில், போக்குவரத்துக்கழகம் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், எம்.வி.முரளிதரன் ஆகியோர், ‘ஜிப்மர் மருத்துவமனையில் சரவண ரூபன் டாக்டராக பணியாற்றுகிறார். அங்கு அவர் வாங்கும் சம்பளத் தொகையை குறிப்பிட்டு, அம்மருத்துவமனையில் கணக்கு அதிகாரி சான்றிதழ் அளித்துள்ளார். அதுமட்டுமல்ல அவரது வலது கை முழுவதும் பாதிக்கப்பட்டதற்கான ஊனச்சான்றும் தாக்கல் செய்துள்ளார். எனவே, அவர் வாங்கும் சம்பளம், ஊனம் ஆகிவற்றின் அடிப்படையில் கணக்கு பார்க்கும்போது, கீழ் கோர்ட்டு நிர்ணயித்த இழப்பீடு தொகை குறைவாக உள்ளது.

எனவே, அதை ரத்து செய்கிறோம். அவருக்கு, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் ரூ.82 லட்சத்து 59 ஆயிரத்து 970-யை வழக்கு தொடரப்பட்ட நாளிலிருந்து ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், 6 வாரங்களுக்குள் வழங்க வேண்டும்’ என்று தீர்ப்பு அளித்துள்ளனர்.

மேலும் செய்திகள்