காருண்யா பல்கலைக்கழக வேந்தர் பால்தினகரன் இல்ல திருமண வரவேற்பு ஓ.பன்னீர்செல்வம் நேரில் வாழ்த்து

காருண்யா பல்கலைக்கழக வேந்தர் பால்தினகரனின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. ஓ.பன்னீர்செல்வம் உள்பட ஏராளமானோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

Update: 2019-01-12 22:30 GMT
சென்னை, 

மறைந்த கிறிஸ்தவ மதபோதகர் டி.ஜி.எஸ்.தினகரனின் பேரனும், ‘இயேசு அழைக்கிறார்’ அமைப்பின் தலைவர்-காருண்யா பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன்-இவாஞ்சலின் மகனுமான சாமுவேலுக்கும், டாக்டர் ராஜ்குமார் ஞானமுத்து - டாக்டர் சகுந்தலா தம்பதியின் மகள் டாக்டர் ஷில்பா ஷேரனுக்கும் பாளையங்கோட்டையில் கடந்த 10-ந்தேதி திருமணம் நடந்தது.

இந்தநிலையில் சாமுவேல்- டாக்டர் ஷில்பா ஷேரன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை வானகரத்தில் உள்ள ‘இயேசு அழைக்கிறார்’ வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பெஞ்சமின், முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன், ‘தினத்தந்தி’ நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தொழில் அதிபர்கள் நல்லி குப்புசாமி செட்டி, பிரசிடெண்ட் ஏ.அபுபக்கர், காருண்யா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர், பேராயர் எஸ்றா சற்குணம், முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி உள்பட ஏராளமானோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

நலத்திட்ட உதவிகள்

முன்னதாக ஏழை குழந்தைகள் ஆயிரம் பேருக்கு உடைகள், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள், பெண்களுக்கு இஸ்திரி பெட்டிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மணமக்கள் சாமுவேல்-ஷில்பா ஷேரன் வழங்கினர். மேலும் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் மறைந்த டி.ஜி.எஸ்.தினகரனின் மனைவி ஸ்டெல்லா மற்றும் மணமக்களின் பெற்றோர் மரக்கன்றுகளை நட்டனர்.

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களை புனரமைக்க ‘சீஷா’ தொண்டு நிறுவனம் முன்னெடுக்கும் மறுவாழ்வு திட்டத்துக்கு ரூ.1 லட்சத்தை மணமக்கள் நன்கொடையாக வழங்கினர்.

மேலும் செய்திகள்