ஜெயலலிதாவை மருத்துவமனையில் மிக அருகில் பார்த்ததாக விஜயபாஸ்கர் கூறினார்; சசிகலா தரப்பு வழக்கறிஞர் பேட்டி

ஜெயலலிதாவை அப்பலோ மருத்துவமனையில் மிக அருகில் பார்த்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-21 14:34 GMT
சென்னை,

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள  ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜரானார்.

ஜெயலலிதாவுக்கான சிகிச்சை குறித்து பல்வேறு கேள்விகள் சுகாதாரத்துறை அமைச்சரிடம் கேட்கப்பட்டன.  இந்த நிலையில், இந்த விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், 7-10-2016 அன்று ஜெயலலிதாவை அப்பலோ மருத்துவமனையில் மிக அருகில் பார்த்ததாக விஜயபாஸ்கர் கூறினார்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட முழு சிகிச்சை விவரங்களும் துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு தெரியும் எனவும் விஜயபாஸ்கர் கூறினார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இறக்கும் வரை நடந்த அத்தனையும் பன்னீர்செல்வத்திற்கு தெரியும் எனவும் விஜயபாஸ்கர் கூறினார்.

சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகிய இருவரின் வாக்குமூலமும் ஒன்றாகவே இருந்தது என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், 3 முறை சம்மன் அனுப்பப்பட்டு ஆஜராகவில்லை என செய்திகள் வெளியாகின்றன.  ஆனால் அதில் உண்மை எதுவும் இல்லை.  3 முறையும் ஆணையமே நேரில் ஆஜராவதில் இருந்து ஒத்தி வைத்து உத்தரவிட்டது என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்