விழுப்புரம் அருகே கிணற்றில் மூழ்கி 3 மாணவிகள் பலி

விழுப்புரம் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவிகள் 3 பேர் இறந்தனர்.

Update: 2019-02-10 21:30 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள கக்கனூரை சேர்ந்தவர்கள் சண்முகம் மகள் பவதாரணி (வயது 11), ஏழுமலை மகள் கவுசல்யா (12), மணி மகள் மணிமொழி (14). பவதாரணி 6-ம் வகுப்பும், கவுசல்யா 7-ம் வகுப்பும், மணிமொழி 9-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

நேற்று பள்ளி விடுமுறை என்பதால் தோழிகளான மாணவிகள் 3 பேரும் விவசாய கிணற்றுக்கு குளிக்க சென்றனர். இவர்களுடன் மணிமொழியின் தங்கையான 6-ம் வகுப்பு படித்து வரும் நித்யாவும் (11) உடன் சென்றாள்.

மணிமொழி, கவுசல்யா, பவதாரணி ஆகியோர் கிணற்றுக்குள் இறங்கி படிக்கட்டில் அமர்ந்து தங்களது துணிகளை துவைத்துக் கொண்டிருந்தனர். 30 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 10 அடிக்கு தண்ணீர் இருந்தது. நித்யா மட்டும் கிணற்றுக்குள் இறங்காமல் மேலே நின்றுகொண்டிருந்தாள்.

அப்போது மாணவி பவதாரணி திடீரென கால்தவறி தண்ணீருக்குள் விழுந்தாள். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மணிமொழி, கவுசல்யா ஆகிய இருவரும் பவதாரணியை காப்பாற்றுவதற்காக தண்ணீருக்குள் குதித்தனர். 3 பேருக்கும் நீச்சல் தெரியாததால் சற்று நேரத்தில் அவர்கள் தண்ணீரில் மூழ்கினர்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நித்யா, ஓடிவந்து தனது பெற்றோரிடம் கூறி அழுதாள். உடனே கிராமமக்கள் அங்கு சென்று தண்ணீரில் மூழ்கிய 3 மாணவிகளையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே 3 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்