காதல் திருமணம் செய்த பெண் டாக்டர் தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்

வத்தலக்குண்டுவில் காதல் திருமணம் செய்த பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-04-13 22:00 GMT
திண்டுக்கல்,

வத்தலக்குண்டுவில் காதல் திருமணம் செய்த பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை போலீசில் புகார் செய்தார்.

காதல் திருமணம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கட்டக்காமன்பட்டியை சேர்ந்தவர் பாலசந்தர் (வயது 29). இவர் சென்னையில் சட்டக்கல்லூரியில் படித்தார். இதேபோல் பண்ணைக்காடு பகுதியை சேர்ந்த சக்திவேல்முருகன் மகள் தனுஷ்பிரியா (27) என்பவரும் சென்னையில் பல் டாக்டருக்கு படித்து கொண்டிருந்தார்.

அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். வத்தலகுண்டுவில் வசித்து வந்த, இவர்களுக்கு 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட தனுஷ்பிரியா, நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தந்தை புகார்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வத்தலக்குண்டு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தனுஷ்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே தனுஷ்பிரியாவின் தந்தை சக்திவேல்முருகன் வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் ‘தன் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனுஷ்பிரியாவுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகளே ஆவதால் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்துகிறார்.

மேலும் செய்திகள்