தமிழகத்தில் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Update: 2019-04-18 02:55 GMT
சென்னை,

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். 

இதனிடையே பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது. திருவாரூர் ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில், வாக்குப்பதிவு எந்திரம் பழுதால் வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டது. இதேபோல சேலம் எடப்பாடி அருகே செட்டிமாங்குறிச்சி அரசு பள்ளி வாக்குச்சாவடியில், எந்திர பழுதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒடிரயம்புலத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதேபோல்,  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாக்களிக்க உள்ள பெரியகுளம் வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் கோளாறு ஏற்பட்டது.  

மேலும் செய்திகள்