ஜலசமாதி அடைந்ததாக கூறப்பட்ட வாலிபரின் உடல் தோண்டி எடுப்பு கலெக்டர் முன்னிலையில் பிரேத பரிசோதனை

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே ஜலசமாதி அடைந்ததாக கூறப்பட்ட வாலிபரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

Update: 2019-04-22 21:30 GMT
கண்ணமங்கலம்,

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ராமநாதபுரம் கிராமம் கொல்லமேடு பகுதியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன், ஆசிரியர். இவரது மகன் தனநாராயணன் (வயது 17). கடந்த ஒரு வருடமாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தார்.

கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி தனநாராயணன் அவரது வீட்டு அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தார். பின்னர் தீயணைப்பு வீரர்கள் அவரை பிணமாக மீட்டனர். ஆனால் அவரின் தந்தை கேட்டுகொண்டதற்கு இணங்க பிரேத பரிசோதனை செய்யாமல் தனநாராயணன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் தனநாராயணன் ஜல சமாதி ஆனதாகவும், அவருக்கு சித்தர் சமாதி அமைத்து வழிபாடு செய்ய தனது நிலத்திலேயே அடக்கம் செய்துள்ளனர் என்றும் தகவல் பரவியது.

இதுகுறித்து படவேடு கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம், தனநாராயணன் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் தனநாராயணன் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என்று போலீசாருக்கு, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று கலெக்டர் முன்னிலையில் மதியம் 1.30 மணியளவில் தனநாராயணன் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அதன்பிறகு திருவண்ணாமலை மாவட்ட மருத்துவமனை தடய அறிவியல் டாக்டர் கமலக்கண்ணன் மற்றும் குழுவினர் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை நடத்தினர்.

மேலும் செய்திகள்