ஆத்தூர் அருகே பாலத்தில் கார் மோதி தீப்பிடித்தது; தந்தை-மகள் சாவு சென்னையை சேர்ந்தவர்கள்

ஆத்தூர் அருகே பாலத்தின் தடுப்புச்சுவரில் கார் மோதி தீப்பிடித்தது. இதில் சென்னையை சேர்ந்த தந்தை-மகள் பலியானார்கள்.

Update: 2019-05-11 22:45 GMT
ஆத்தூர்,

சென்னை மேற்கு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 50). இவர் துபாயில் வேலை பார்த்துவிட்டு சமீபத்தில் சென்னை வந்தார். இவர் நேற்று காலை தனது காரில் மனைவி கவிதா (42), மகள்கள் தர்ஷினி (19), தீக்‌ஷா (13) ஆகியோருடன் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள கவிதாவின் தம்பி வக்கீல் ரமேஷ்பாபு வீட்டிற்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்தார். காரை பார்த்திபன் ஓட்டினார்.

இவர்களது கார் ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி புறவழிச் சாலையில் மேம்பாலம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியது. மோதிய வேகத்தில் காரின் முன்புறம் நொறுங்கியதோடு, தீப்பிடித்தும் எரிந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து காரில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய 4 பேரையும் மீட்க முயன்றனர்.

ஆனால் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். படுகாயம் அடைந்த மற்றவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தர்ஷினி செல்லும் வழியிலேயே இறந்தார்.

படுகாயம் அடைந்த கவிதா, தீக்‌ஷா ஆகியோர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்