பழனிச்சாமி உடலில் உள்ள ரத்த காயங்கள் பற்றி விரிவான அறிக்கைத் தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான கல்லூரி காசாளர் பழனிச்சாமி உடலில் உள்ள ரத்த காயங்கள் பற்றி விரிவான அறிக்கைத் தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

Update: 2019-05-15 10:04 GMT
சென்னை

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான கல்லூரியில் காசாளராக பணியாற்றி மரணமடைந்த பழனிச்சாமி உடலில், ரத்த காயங்கள் இருந்ததாக கூறப்படும் புகார் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை  ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி, பழனிச்சாமியின் மகன் ரோஹின்குமார் தாக்கல் செய்த மனு, ஐகோர்ட்  நீதிபதிகள் கார்த்திக்கேயன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பழனிச்சாமியின் பிரேத பரிசோதனை, பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள உடலின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையில் திருப்தி அடையாத நீதிபதிகள், பழனிச்சாமியின் உடலில் உள்ள காயங்கள் அவர் உயிரோடு இருக்கும் போதே ஏற்பட்டதா அல்லது அவருக்கு யாரேனும் காயங்கள் ஏற்படுத்தினார்களா என சந்தேகம் எழுப்பினர்.

மேலும், தண்ணீர் குட்டையில் மூழ்கி இறந்த பழனிச்சாமியின் வாயில் ரத்த காயங்கள் இருந்தது குறித்தும், கண் மற்றும் நாக்கு பிதுங்கி வெளியேறி இருந்தது குறித்தும் அறிக்கையில் முழுமையான விளக்கம் இல்லை எனவும் தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக நாளை முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர். 

மேலும் செய்திகள்