ஆசிரியர் தகுதி தேர்வு ஜூன் 8, 9 ஆகிய நாட்களில் நடைபெறும்; ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
ஆசிரியர் தகுதி தேர்வு வருகிற ஜூன் 8, 9 ஆகிய நாட்களில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை,
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2010 ஆகஸ்ட் 23ஆம் தேதி அமல்படுத்தப்பட்டதை அடுத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியில் சேர தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.
இச்சட்டமானது தமிழகத்தில் 2011இல் நடைமுறைக்கு வந்ததை அடுத்து தகுதி தேர்வில் தேர்ச்சி பெற ஆசிரியர்களுக்கு 2016ஆம் ஆண்டு வரை அவகாசம் வழங்கப்பட்டு, பின் 2019 மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
எனினும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாமல் 1,500 ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களது ஊதியத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு இரண்டு வாரங்கள் சிறப்பு பயிற்சி அளிக்கவுள்ளதாக பள்ளி கல்வி துறை தரப்பில் தகவல் வெளியானது. இந்நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வு வருகிற ஜூன் 8, 9 ஆகிய நாட்களில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஜூன் 8ல் முதல் தாள் தேர்வும், ஜூன் 9ல் இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறும். இரு தேர்வுகளும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.