தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு

அறக்கட்டளைக்கு சொந்தமான என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

Update: 2019-05-16 21:15 GMT
சென்னை,

விஜயவாடாவை சேர்ந்த தனியார் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு கல்வி அறக்கட்டளை சார்பில் மருத்துவ கல்லூரி மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த அறக்கட்டளை வாங்கிய கடனை முறையாக செலுத்தாததால் வங்கிகள் அந்த அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகளை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ஏற்கனவே அந்த கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் வேறு கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். எனவே வரும் கல்வியாண்டில் அந்த அறக்கட்டளைக்கு சொந்தமான என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை விதிக்க வேண்டும்” என கோரியிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், “மாணவர்களின் எதிர்காலம் கருதி இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை வரும் கல்வியாண்டில் அந்த அறக்கட்டளைக்கு சொந்தமான என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மேலும் அக்கல்லூரிகளுக்கான இணைப்பை தற்காலிகமாக ரத்து செய்ய அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை ஜூன் 7-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் செய்திகள்