இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள்

இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-05-08 03:24 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர் திருவாடானை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

என்னுடன் படித்த சமய சந்துரு (20) என்பவர் ஆசை வார்த்தை கூறி என்னை காதலித்து வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு என்னை அடிக்கடி சந்திப்பார். அப்போது எனக்கு வயது 18-க்கும் குறைவாக இருந்தது. அப்போது அவர் என்னை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது தனுஷ்(20) என்பவர் அதை வீடியோ எடுத்தார்.

பின்னர் தனுஷ் என்னை பாலியல் பலாத்காரம் செய்தபோது சமய சந்துரு வீடியோ எடுத்தார். பின்னர் அடிக்கடி அந்த வீடியோவை காட்டி என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் இந்த வீடியோவை காட்டி என்னுடன் உல்லாசமாக இருந்தான். அதையும் சமய சந்துரு, தனுஷ் ஆகியோர் வீடியோ எடுத்துக் கொண்டனர்.

அடிக்கடி என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு அந்த வீடியோவை பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என என்னை மிரட்டினர். இதனால் அதற்குப் பயந்து நானும் அவர்கள் சொன்னபடி நடந்தேன். இந்நிலையில் எனக்கு திருமணம் நிச்சயமானது. அதை தெரிந்து கொண்டு அவர்கள் மீண்டும் என்னை தொடர்பு கொண்டு நீ நாங்கள் சொல்வதைக் கேள். இல்லாவிட்டால் சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் எனக் கூறினர்.

நான் அதற்கு மறுத்தபோது நாங்கள் சொல்வதைக் கேட்காவிட்டால் பணம், நகையை கொடுக்க வேண்டும் என்று மிரட்டினர். நான் மறுத்ததால் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இதனை அறிந்த மணமகன் வீட்டினர் திருமணத்தை நிறுத்தி விட்டனர். மீண்டும் தொடர்ந்து என்னை மிரட்டி வருகின்றனர் என்றும் அந்தப் புகாரில் கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்தப்பெண்ணிடம் விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் இது தொடர்பாக சமய சந்துரு, தனுஷ், 17 வயது சிறுவன் ஆகிய 3 பேர் மீது போக்சோ வழக்குபதிவு செய்தனர். இது தொடர்பாக சமயசந்துரு, தனுஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். 17 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.

இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி 2 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்