புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கு; மேலாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் வங்கியின் மேலாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2019-06-07 08:28 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அருகே உள்ள திருக்கட்டளையை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஏப்ரல் 22ந்தேதி வீட்டில் இருந்து தனது காரில் வெளியே சென்ற மாரிமுத்து மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை எனக்கூறி, அவரது மனைவி ராணி புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே மாரிமுத்து திடீரென மாயமானதால், அவர் வங்கியில் இருந்து நகைகளை எடுத்துச்சென்று இருக்கலாம் என வங்கி அதிகாரிகள் சந்தேகப்பட்டு, வங்கியில் இருந்த நகைகளை சரிபார்த்தனர். இந்நிலையில் மாரிமுத்து மணமேல்குடி கோடியக்கரை கடலில் பிணமாக மிதந்தார். இதனால் இந்த வழக்கில் மேலும் குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில் வங்கி நிர்வாகத்தின் சார்பில், 13¾ கிலோ தங்க நகைகளை காணவில்லை என்றும், அவை மாயமானதில் மாரிமுத்துவுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் புதுக்கோட்டை டவுன் போலீசார் மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் பலரை விசாரணை செய்து வருகின்றனர்.  இந்த கொள்ளையின்போது பணியிலிருந்த மேலாளர் உள்பட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து வங்கியின் திருச்சி மண்டல அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் செய்திகள்