தம்பியை கொலை செய்தவரை கொன்ற அண்ணன் : ரத்தத்தை தம்பியின் சமாதியில் தெளித்தார்

சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூர் அருகே தம்பியை கொலை செய்தவரை தீர்த்துக் கட்டிய அண்ணன், அந்த ரத்தத்தை தம்பியின் சமாதியில் தெளித்துள்ளார்.

Update: 2019-07-12 08:38 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் மாத்தூரை சேர்ந்த இளைஞர்கள் கடந்த மார்ச் மாதம் மதுக்கடையில் மது அருந்திக் கொண்டிருந்த போது, அருண்பிரசாந்த் என்பவருக்கும், சிவமூர்த்தி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த மார்ச் 17ம் தேதி, படமாத்தூர் அடுத்த வேலாங்குளம் கண்மாய் பகுதியில் வைத்து அருண்பிரசாந்தை, சிவமூர்த்தி தனது நண்பர்களுடன் சேர்ந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.

இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட சிவமூர்த்தி ஜாமீனில் வெளியே வந்தான். இந்நிலையில் கடந்த 9ம் தேதி சிவமூர்த்தியை, வழிமறித்த 7 பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. இந்த கொலை குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் சிவமூர்த்தியை கொலை செய்தது தான் தான் என்று கூறி சிவச்சந்திரனின் சகோதரனான ஊர்க்காவலன், வாட்ஸ் அப் குழுவில் வெளியிட்ட ஆடியோ வெளியானது. அதில் தனது தம்பியைக் கொன்றவனை வெற்றிகரமாக கொலை செய்து விட்டதாகவும், அவனது ரத்தத்தை எடுத்து சென்று தனது தம்பி உயிரிழந்த இடத்தில் தெளித்து விட்டதாகவும், ஊர்க்காவலன் கூறியிருந்தான். மேலும் சிவமூர்த்தியின் ரத்தம் தோய்ந்த துணியை எடுத்துச் சென்று தனது தம்பி கொலை செய்யப்பட்ட இடத்தில் போட்டதாகவும், தற்போது ஓரளவுக்காவது தனது தம்பியின் ஆத்மா நிம்மதி அடைந்திருக்கும் எனவும் கூறி அதிர வைத்தான்.

இந்நிலையில் கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த ஊர்க்காவலன், நேற்று மாலை 5.30 மணியளவில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான்.

மேலும் செய்திகள்