ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையே மீண்டும் ரெயில்: ஆய்வு பணியில் ஐ.ஐ.டி. பொறியாளர்கள்
ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையே மீண்டும் ரெயில் போக்குவரத்து நடைபெறுவதற்கான ஆய்வு பணியில் ஐ.ஐ.டி. பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில், தனுஷ்கோடிக்கு மீண்டும் ரெயில் போக்குவரத்தை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 1914ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்த ரெயில் பாதை பின்னர் 1964ம் ஆண்டு ஏற்பட்ட புயலில் முற்றிலும் சேதமடைந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த பகுதியில் ரெயில் சேவை தொடங்க மத்திய அரசு ரூ.208 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதனால் 55 ஆண்டுகளுக்கு பிறகு ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி இடையே மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன.
இதனையடுத்து ரெயில்வே அதிகாரிகள் மற்றும் சென்னை ஐ.ஐ.டி.யை சேர்ந்த பொறியாளர்கள் கொண்ட குழுவானது ராமேஸ்வரம் ரெயில் நிலையத்தில் இருந்து தனுஷ்கோடி வரை, பழைய ரெயில் பாதை வழியாக ஆய்வு பணியை மேற்கொண்டது.
ஏற்கனவே இருந்த ரெயில் பாதையில், தற்போது பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கையில் ரெயில்வே நிர்வாகம் ஈடுபடவுள்ளது.