ஜீவசமாதி அடைவதாக பொதுமக்கள் முன்னிலையில் அமர்ந்த சாமியார்

சிவகங்கை அருகே ஜீவசமாதி அடைவதாக கூறி பொதுமக்கள் முன்னிலையில் சாமியார் அமர்ந்தார்.

Update: 2019-09-12 22:15 GMT
சிவகங்கை, 

சிவகங்கை அருகே ஜீவசமாதி அடைவதாக கூறி பொதுமக்கள் முன்னிலையில் சாமியார் அமர்ந்தார். குழியும் தோண்டப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஜீவசமாதி

சிவகங்கையை அடுத்த பாசாங்கரையை சேர்ந்தவர் இருளப்பசாமி (வயது 71). இவருக்கு இருளாயி என்ற மனைவியும் கண்ணாயிரம் என்ற மகனும், பூச்சி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் இருளப்பசாமி பாசாங்கரையில் ஜீவசமாதி அடையப் போவதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அதைத்தொடர்ந்து அவரிடம் ஆசி பெறுவதற்காக தினமும் ஏராளமான ஆண்களும், பெண்களும் பாசாங்கரைக்கு வந்த வண்ணம் இருந்தனர். இந்தநிலையில் நேற்று சாமியார் இருளப்பசாமி ஜீவசமாதி அடைவதற்காக தேர்வு செய்த இடத்தின் அருகில் வந்து அமர்ந்து கொண்டார். அவரை காண்பதற்காக ஏராளமானவர்கள் அங்கு வந்தனர்.

குழி தயார்

பொதுமக்கள் முன்னிலையில் அமர்ந்த சாமியார் கூறும் போது, நள்ளிரவு 12 மணியில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்குள் தன்னுடைய உயிர் பிரிந்து விடும் என்று தெரிவித்தாராம். இதையடுத்து 6½ அடி ஆழத்தில், அங்கு குழி தோண்டப்பட்டது.

மேலும் இறுதிச்சடங்குக்கு தேவையான ஏற்பாடுகளையும் செய்தனர். அவர் அமர்ந்திருந்த இடத்தின் அருகில் பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. அவரை காண வந்த பொதுமக்களுக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்டது.

இருளப்பசாமி ஜீவசமாதி அடைவதாக அறிவித்ததை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த இடத்தில் தங்கியிருந்து கண்காணித்தனர். தொடர்ந்து பொதுமக்கள் ஏராளமானவர்கள் திரண்டு வந்ததால் அங்கு பரபரப்பு இரவிலும் நீடித்தது.

மேலும் செய்திகள்