மு.க. ஸ்டாலினை சாதாரணமாக தான் வாழ்த்தினேன்; பா.ஜ.க. நிர்வாகி பேட்டி
மு.க. ஸ்டாலினை சாதாரணமாக தான் வாழ்த்தினேன் என பா.ஜ.க. மாநில துணை தலைவர் பி.டி. அரசக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பா.ஜ.க. மாநில துணை தலைவர் பி.டி. அரசக்குமார் கலந்து கொண்டு நேற்று பேசும்பொழுது, எம்.ஜி.ஆருக்கு அடுத்து நான் ரசிக்கும் தலைவர் மு.க. ஸ்டாலின். அவர் நினைத்தால் கூவத்தூர் சம்பவத்தின்போதே முதல்வராகியிருக்க முடியும். ஆனால் அவர் ஜனநாயகத்திற்காக அமைதியாக இருந்தார். காலம் வரும் கட்டாயம் ஸ்டாலின் முதல் அமைச்சர் ஆவார் என பேசினார்.
அவரது இந்த பேச்சு பா.ஜ.க.வினரிடையே சலசலப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தனது பேச்சு பற்றி செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியில், என் தனிப்பட்ட உணர்வுகளை நான் வெளிப்படுத்தினேன். ஸ்டாலினை சாதாரணமாக தான் வாழ்த்தினேன். கட்சி தலைமை என்ன முடிவு எடுத்தாலும் அதனை ஏற்க தயார் என கூறியுள்ளார்.