தி.மு.க. கூட்டணி வேட்பாளர் பட்டியல் வெளியீடு நாளை மனுத்தாக்கல் செய்கிறார்கள்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் அந்தெந்த மாவட்டங்கள் வாரியாக வெளியிடப்பட்டு இருக்கிறது. நாளை (திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள்.

Update: 2019-12-14 23:36 GMT
சென்னை,

தமிழகத்தில் கிராம அளவில் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு மட்டும் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளை (திங்கட்கிழமை) முடிகிறது. இதையொட்டி அரசியல் கட்சியினரும், சுயேச்சைகளும் போட்டி, போட்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். நாளையுடன், வேட்புமனு தாக்கல் முடிய இருப்பதால் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணியில் உள்ளாட்சி இடங்களை பகிர்வது தொடர்பாக இறுதி கட்ட பேச்சுவார்த்தை பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

கட்சி தலைமைகளின் உத்தரவுபடி, மாவட்ட செயலாளர்கள் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பேசி இடங்களை ஒதுக்கி வருகின்றனர். அ.தி.மு.க.வை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டு விட்டது. மேலும் அ.தி.மு.க. சார்பில், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கும் போட்டியிடுபவர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இழுபறியில் இருக்கும் வார்டுகளை பிரித்துக்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை கூட்டணி கட்சிகளுடன் மாவட்ட அளவில் அ.தி.மு.க. நடத்தி கொண்டு இருக்கிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் மாவட்ட வாரியாக உள்ளாட்சி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை (இன்று) அறிவிக்க இருக்கிறது.

தி.மு.க. கூட்டணி பட்டியல் வெளியீடு

இதற்கிடையே, தி.மு.க. சார்பிலும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, உரிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்தாலோசனை அந்தந்த தி.மு.க. மாவட்ட அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது வரை, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, கரூர், சேலம் மத்தி, சேலம் மேற்கு.

கோவை தெற்கு, நீலகிரி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு ஆகிய மாவட்டங்களில் கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து சுமுக முடிவெடுக்கப்பட்டு, தி.மு.க. தலைமை ஒப்புதலோடு, அந்தந்த மாவட்ட தி.மு.க. சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மற்ற மாவட்ட தி.மு.க. செயலாளர்கள்-தோழமைக் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. விரைவில் அந்தந்த மாவட்ட தி.மு.க. சார்பில் பட்டியல் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தாக்கல் செய்கிறார்கள்

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலைக்குள் அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சிகளின் சார்பில் உள்ளாட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிக்கிறார்கள். அதனை தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளான, நாளை (திங்கட்கிழமை) அ.தி.மு.க., தி.மு.க. உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்கிறார்கள். வேட்புமனு தாக்கலுக்கு பிறகே, உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்