நாளைய தமிழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினே என்று பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன்!! -திமுகவில் சேருகிறாரா...?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே நாளைய தமிழகத்தின் தலைவர் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேசியுள்ளார். இதனால் அவர் திமுகவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2020-01-30 07:34 GMT
திருவாரூர்

தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் இல்ல திருமண விழாவில்  கலந்துகொண்ட சசிகலா சகோதரர் திவாகரன் பேசும்போது கூறியதாவது:-

இன்று தமிழ்நாட்டின் நிலை மிக கேவலமாக உள்ளது. தமிழர்கள் இரண்டாம் தர நிலையில் நடத்தப்படுகிறோம்.

கன்னடத்திலிருந்து வந்த ஒருவர், பெரியாரை பேசும் அளவிற்கு இன்று  துணிச்சல் வந்துள்ளது. திராவிட தலைவர்கள் ஒருவர், ஒருவராக மறைந்ததால் இந்த நிலை வருகிறது. தமிழ், தமிழகம் தான் நமக்கு முதல் முக்கியம். அதை காப்பவர்களுக்கு பின் நாம் நிற்க வேண்டும்.

தமிழகத்தில் திராவிட பாரம்பரியத்தை காக்க வேண்டும். அதை காக்கும் ஒரே சக்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான். நாளைய தமிழகம் அவர்தான்.

அரசியலில் நான் எதையும் எதிர்பார்க்க மாட்டேன். சிலருக்கு இடைஞ்சல் செய்வதற்காகவே அசியலுக்கு வந்தேன்.

85 சதவீத திமுகவின் வெற்றியே உள்ளாட்சி தேர்தலில் உறுதி  செய்யப்பட்டிருந்தது. அதில் பெரும்பாலும் ஆளுங்கட்சியால் தட்டி பறிக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார்.

திவாகரனின் இந்த பேச்சால் அவர் திமுகவில் சேர்வார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்