காவிரி டெல்டா பகுதியை ‘வேளாண் மண்டலமாக அறிவிப்பதை வரவேற்கிறோம்’ - கே.எஸ்.அழகிரி பேட்டி
காவிரி டெல்டா பகுதியை ‘வேளாண் மண்டலமாக அறிவிப்பதை வரவேற்கிறோம்’ என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி டெல்டா பகுதியை வேளாண்மை மண்டலமாக அறிவிக்க போவதாக முதல்-அமைச்சர் அறிவித்ததை வரவேற்கிறேன். ஆனால் இதில் பெரிய அளவில் விவாதங்களும், ஆலோசனைகளும் செய்யப்பட வேண்டும்.
வேளாண்மை மண்டலம் என்ற அறிவித்தால், அங்கு வேறு தொழில்கள் செய்ய அனுமதி உண்டா என்பது தெரியவேண்டும்.
அனுமதி உண்டு என்றால் எந்த தொழில்கள் செய்யலாம்?. எந்த தொழில்கள் செய்யக்கூடாது? என்ற விவரங்களை தொழில் சார்ந்த அறிஞர்கள், வேளாண் விஞ்ஞானிகள், அரசு அதிகாரிகள், எதிர்க்கட்சிகளுடன் கலந்து பேசி அறிவிக்க வேண்டும்.
பிற தொழில்களுக்கு வாய்ப்பு அளித்தால் தான் விவசாயிகள் வளமாக வாழ முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
7 மாநிலங்களில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது. சில மாநிலங்களில் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். இதனால் டெல்லி தேர்தல் முடிவுகள் பெரிய விஷயம் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.