சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கப்பலில் வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை
சீனாவில் இருந்து சென்னை வந்த கப்பலில் உள்ள 19 பேரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.
சென்னை
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,000ஆக உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் 132 பேர் உயிரிழந்து உள்ளனர்.
சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கப்பலில் வந்த 19 பேரை சோதனை செய்ததில் 2 பேருக்கு லேசான காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. ஆனால் அவர்களுக்கு மூச்சு திணறல் இல்லை. இதை தொடர்ந்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என தகவல் வெளியானது.
கொரோனா அறிகுறிகளுடன் வந்தவர்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கபட்டு வந்தனர். இந்த நிலையில் 2 பேரின் ரத்த மாதிரியை சோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்து உள்ளது.
2 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.