கொரோனா வைரஸ், மோடி என இரண்டையும் நாம் கவனிக்க வேண்டும்; கே.எஸ். அழகிரி
கொரோனா வைரஸ், மோடி என இரண்டையும் நாம் கவனிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
சென்னை,
சீன நாட்டின் உகான் நகரில் கடந்த டிசம்பர் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிதீவிரமுடன் பரவி வருகிறது. ஆண், பெண் பேதமின்றி உலகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ளதுடன், 1 லட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றனர்.
இதன் பாதிப்பு இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. கர்நாடகா மற்றும் டெல்லியில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர். நாடு முழுவதும், இதுவரை 107 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று தமிழகத்திலும் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி கூறும்பொழுது, கொரோனா வைரசை நான் அரசியலாக்கவில்லை. அது ஒரு தீவிர விவகாரம் ஆகும்.
ஆனால், குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்திற்கு எதிராக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொரோனா வைரசை பயன்படுத்த கூடும். அதனால் நாம் கொரோனா வைரஸ் மற்றும் மோடி என இரண்டையும் கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.