கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்; தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி இன்றிரவு 7 மணிக்கு உரை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி இன்றிரவு 7 மணிக்கு உரையாற்றுகிறார்.
சென்னை,
சீனாவின் உகான் நகரில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா வைரசை எதிர்கொள்வதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று நள்ளிரவு முதல் 21 நாட்கள் வரை இந்தியா முழு அளவில் முடக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவரை 23 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கையொட்டி பொதுமக்கள் வீடுகளை விட்டு தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர். இந்நிலையில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி இன்றிரவு 7 மணிக்கு உரையாற்றுகிறார். இதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி தமிழக மக்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.