தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து உள்ளது.

Update: 2020-04-04 12:45 GMT
சென்னை,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.  தமிழக சுகாதாரத்துறை நேற்று மாலை வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக உள்ளது.

தமிழகத்தில் முதன்முறையாக மதுரையை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா பாதிப்பில் பலியானார்.  இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 51 வயது நபர் உயிரிழந்ததாக தமிழக சுகாதார துறை இன்று தெரிவித்தது.  உயிரிழந்த நபர் டெல்லி நிஜாமுதீனில் நடந்த மாநாட்டிற்கு சென்று  வந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், தேனியை சேர்ந்த 53 வயது நிறைந்த பெண் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்ட நிலையில் பலியாகி உள்ளார்.

இவரது கணவர் கொரோனா பாதிப்பிற்காக தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டு இருக்கிறார்.  இதனால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் செய்திகள்