கொரோனா தடுப்புப் பணியின்போது விபத்தில் மரணம்: போலீஸ் ஏட்டு குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு

கொரோனா தடுப்புப் பணியின்போது விபத்தில் மரணமடைந்த போலீஸ் ஏட்டு குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-05-08 22:30 GMT
சென்னை, 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த சேட்டு, ஓசூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தார். 7-ந் தேதியன்று அவர் தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் உள்ள ஜூஜூவாடியில், கொரோனா வைரஸ் தொற்று தடுப்புக்காக அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, சென்னையிலிருந்து அகமதாபாத்திற்கு சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது, பின்னால் வந்த டிப்பர் லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக மோதியதால், கன்டெய்னர் லாரி அங்கிருந்த தடுப்பின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. அப்போது தடுப்பின் மறுபுறம் இருந்த தலைமைக் காவலர் சேட்டு பலத்த காயமடைந்து, உயிரிழந்தார்.

இந்த செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். பணியின் போது உயிரிழந்த தலைமைக் காவலர் சேட்டுவை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சேட்டுவின் குடும்பத்திற்கு, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்