தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை முதல் வெப்பம் படிப்படியாக குறையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Update: 2024-05-08 01:02 GMT

சென்னை,

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாத அளவுக்கு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக வட உள்மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் வீசும் வெப்ப அலையால், அந்த மாவட்டங்களில் வெப்பம் சுட்டெரித்து வருவதை பார்க்க முடிகிறது.

இது ஒரு புறம் இருக்க வெயிலுக்கு இதமாக, கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. அந்தவகையில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை (வியாழக்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் காற்றுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதன் தொடர்ச்சியாக இன்று (புதன்கிழமை) முதல் 11-ந் தேதி (சனிக்கிழமை) வரை தமிழக உள் மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பநிலை 4 டிகிரி முதல் 6 டிகிரி வரை அதிகரித்து காணப்படும் எனவும், நாளை (வியாழக்கிழமை) முதல் 11-ந் தேதி வரை தமிழ்நாட்டில் சில இடங்களில் வெப்பநிலை 4 டிகிரி வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்