நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2020-05-18 09:13 GMT
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் தீவிரமடைந்த நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மத்திய அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.  இவற்றில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், அந்த தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.  இதன்படி, ஜூலை 1ந்தேதி முதல் 15ந்தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.  தேர்வுகள் காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவலை முன்னிட்டு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடிப்பதற்காக சில விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தேர்வு எழுதும் மாணவ மாணவியர்கள், தேர்வு அறைக்கு வரும்பொழுது, தங்களுடன் சானிடைசர்கள் கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  தேர்வு எழுத வரும் மாணவ மாணவியர்களின் உடல் ஆரோக்கியத்தை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்.

அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும்.  தேர்வு அறைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும் போன்ற விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்