சொந்த ஊர் திரும்பும் வெளிமாநில தொழிலாளர்களின் ரெயில் பயணத்துக்கு ரூ.67 கோடி மராட்டிய அரசு விடுவித்தது

சொந்த ஊர் திரும்பும் வெளிமாநில தொழிலாளர்களின் ரெயில் பயண கட்டணத்திற்காக ரூ.67 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்து உள்ளது.

Update: 2020-05-21 23:56 GMT
மும்பை,

கொரோனா ஊரடங்கு காரணமாக மராட்டியத்தின் மும்பை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சிக்கி தவித்தனர். இந்தநிலையில், நாடு முழுவதும் சிக்கி தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. மராட்டியத்தில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்கள் மூலம் ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பினர்.

அவர்களுக்கான பயண கட்டணத்தின் முழு தொகையையும் செலுத்துவதாக மராட்டிய அரசு தெரிவித்தது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ரெயில் கட்டணத்தில் 85 சதவீத தொகை மத்திய அரசு செலுத்துவதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறியிருந்தார்.

இந்நிலையில், வெளிமாநில தொழிலாளர்களின் ரெயில் பயணத்திற்காக முதல்-மந்திரியின் நிவாரண நிதியில் இருந்து இதுவரை ரூ.67 கோடியே 19 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்