சென்னை மாநகரில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1768 பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னை மாநகரில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1768 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடங்களை தனிமைப்படுத்தி, அந்த பகுதியில் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 569 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர் போன்ற மண்டலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.
இதையடுத்து சென்னையில் 758 இடங்கள் கொரோனா கட்டுபாட்டு பகுதியாக அறிவித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மாநகரில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1768 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகரை தொடர்ந்து தேனாம்பேட்டை மண்டலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.