தமிழ் ஊட்டிய அரசியல் அறிஞர் கலைஞர் - கமல்ஹாசன் புகழாரம்

செந்தமிழில் பெயர் சூட்டல் தொடங்கி,பேருந்தில் திருக்குறள் வரை தமிழ் ஊட்டிய அரசியல் அறிஞர் கலைஞர் என கமல்ஹாசன் புகழாரம் சூட்டி உள்ளார்.

Update: 2020-06-03 09:14 GMT
சென்னை,

மறைந்த முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் இன்று (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது. கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

கருணாநிதியின் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, திமுக பொருளாளர் துரைமுருகன், நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேலும், நினைவிடத்தில் திமுகவை சேர்ந்த ஒருவருக்குத் திருமணத்தையும் ஸ்டாலின் நடத்தி வைத்தார். முன்னதாக, கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திலும், அண்ணா அறிவாலயத்திலும் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில்,

பகுத்தறிவை எழுத்தில் பேசி, செந்தமிழில் பெயர் சூட்டல் தொடங்கி, பேருந்தில் திருக்குறள் வரை தமிழ் ஊட்டிய அரசியல் அறிஞர் கலைஞர் அவர்களை இந்நாளில் நினைவு கூர்கிறேன். சமூக நீதியையும் வளர்ச்சியையும் தன்னால் இயன்றவரை சாத்தியமாக்கிய அரசியல் ஆளுமை அவர் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்