பெண் காவலர் ரேவதிக்கு ஒரு மாதம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது- தென்மண்டல ஐஜி முருகன்
பெண் காவலர் ரேவதிக்கு ஒரு மாதம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது என தென்மண்டல ஐஜி முருகன் தெரிவித்து உள்ளார்.
தூத்தூக்குடி
லாக்கப் மரணம் என்பது தவிர்க்கப்பட வேண்டியது என்பதே காவல்துறையின் நிலைப்பாடு என புதிதாக பொறுப்பேற்ற மதுரை தென்மண்டல ஐஜி முருகன் கருத்து தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாத்தான்குள விவகாரம் குறித்து தற்போது கருத்து கூற முடியாது என்றார்.
பின்னர் தூத்துக்குடி சென்ற அவர் அங்கு செய்தியாலர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:-
சிபிசிஐடி போலீசாருக்கு உள்ளூர் போலீசார் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். லாக் அப் மரணங்கள் நடைபெற கூடாது என்பதே காவல்துறையின் விருப்பம். தொடர் பயிற்சியின் மூலம் லாக் அப் மரணங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும்.
ஊரடங்கு நேரத்தில் காவலர்கள் நண்பர்கள் குழு சரியாக செயல்படுவதை உறுதி செய்வோம். தொடர் பயிற்சியின் மூலமே சில விஷயங்களை மாற்ற முடியும். முதலமைச்சர் சாத்தான்குளம் வருவது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
காவலர்கள் நண்பர்கள் குழுவினர் வரம்பு மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்களுக்கு போதிய ஓய்வு வழங்கப்படுகிறது.
காவல்நிலையங்களில் பதிவேடுகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்வோம்.பெண் காவலர் ரேவதிக்கு ஒரு மாதம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.பெண் காவலரின் கோரிக்கையின் படி, சம்பளத்துடன் விடுப்பு வழங்கியுள்ளோம் என கூறினார்.