சென்னையில் கொரோனாவுக்கு நேற்று இரவு முதல் காலை வரை 18 பேர் பலி

சென்னையில் கொரோனாவுக்கு நேற்று இரவு முதல் காலை வரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2020-07-09 04:20 GMT
சென்னை,

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. 

தமிழகத்தில் சென்னையில் தான் தினமும்  1,000 க்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.  சென்னையில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 72,500 ஆக உள்ளது. இதையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது.

இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 18 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 6 பேர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் 3 பேர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 5 பேர்  மற்றும் சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் 1 பேர் என மொத்தம் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மேலும் சென்னையில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பு சற்று குறைந்தே காணப்படுகிறது. உயிரிழப்பு நேற்றிலிருந்து இன்று குறைவாகவே உள்ளது. இதனால் மக்களிடையே இருந்த அச்சம் வெகுவாக குறைந்துள்ளது.

மேலும் செய்திகள்