கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

கொரோனாவிற்கு மருத்து கண்டறிவது தொடர்பான விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதினறம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2020-07-09 10:23 GMT
சென்னை,

சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தின் தந்தை தொடர்ந்த வழக்கில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தை எதிர் மனுதாரராக சென்னை உயர்நீதிமன்றம் சேர்த்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்ற போது, நீதிபதிகள் மத்திய மாநில அரசுகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

அதன்படி, “கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக இதுவரை எத்தனை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்? கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்?

தமிழகத்தில் ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, சித்த மருத்துவ வளர்ச்சிக்கு இதுவரை எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது? சித்த மருத்துவர்கள் கண்டுபிடித்த எத்தனை மருந்துகள் ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது?

நாட்டில் எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி மருத்துவமனைகள் உள்ளன? அவற்றில் போதுமான நிபுணர்கள் உள்ளனரா?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

மேலும், நமது மருத்துவர்களுக்கு கட்டமைப்பு, பண உதவி செய்து அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய நீதிபதிகள், சித்த மருத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் புறக்கணிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்