மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை மறுநாள் ஆலோசனை

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளார்.

Update: 2020-07-28 05:56 GMT
சென்னை,

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்திலும் பல்வேறு தளர்வுகளுடன் இதுவரை 5 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

தற்போது சென்னையில் மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் கட்டுக்குள் இருந்த கொரோனா மீண்டும் வீரியம் பெற தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் கொரோனா நிலவரம் குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா?, தளர்த்துவதா? என்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளார்.

மேலும் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது தொடர்பாக மருத்துவக்குழு பரிந்துரை வழங்கும் என்றும்  கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும் மருத்துவ குழுவிடம் முதலமைச்சர் கருத்துக் கேட்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள பொதுப் போக்குவரத்து தொடர்பாகவும் முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதகாவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்