மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 90,000 கனஅடியாக உயர்வு

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து நேற்றைய அளவில் இருந்து இருமடங்காக உயர்ந்து 90,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Update: 2020-08-09 04:31 GMT
சேலம்,

காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கா்நாடக அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன. இதையடுத்து கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணை மற்றும் நுகு அணை ஆகிய அணைகளுக்கு வரும் மழைநீா் முழுவதும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றுக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,23,000 ஆக அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி, மேட்டூா் அணைக்கு வரும் நீா்வரத்து நொடிக்கு 45,000 கன அடியாக இருந்தது. இன்று மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து இருமடங்காக அதிகரித்து வினாடிக்கு 90,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீா்மட்டம் நேற்றைய அளவில் இருந்து 5 அடி உயர்ந்து 75.83 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக நொடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் தற்போது 37.92 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. 

மேலும் செய்திகள்