கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலத்தை கையகப்படுத்த தடையில்லை - சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு

கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலத்தை கையகப்படுத்த தடையில்லை என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2020-08-18 13:50 GMT
சென்னை,

கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விரிவாக்க மத்திய அரசு முடிவெடுத்தது. 

இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த 2017 ம் ஆண்டு தொடங்கியது. இதற்கு எதிராக கோவையை சேர்ந்த12 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். முறையாக கருத்து கேட்காமல்,  நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்ததாக மனுவில் தெரிவித்திருந்தனர். 

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நிலத்தை  கையகப்படுத்த தடை விதித்தது. பின்னர் இந்த தடையை நீக்க கோரி தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது,  கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலத்தை கையகப்படுத்த தடையில்லை என்றும், நிலம் கையகப்படுத்துவதற்கான தொகையை பெற்றுக்கொள்ள அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாகவும், அதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கி விட்டதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது . மேலும் வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், தடையை நீக்கி நிலத்தை கையகப்படுத்தி திட்டத்தை தொடரலாம் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்