அரசு பள்ளிகளில் 12¾ லட்சம் மாணவர்கள் சேர்க்கை; 1-ம் வகுப்பில் மட்டும் 2¾ லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையில் சுமார் 12 லட்சத்து 88 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Update: 2020-09-10 03:30 GMT
சென்னை,

கொரோனா காரணமாக கடந்த மாதம் (ஆகஸ்டு) 17-ந்தேதி முதல் பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் தொடங்கியது. சேர்க்கை தொடங்கிய முதல் 2 நாட்களிலேயே சுமார் 2½ லட்சத்துக்கும் மேல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்து இருந்தனர். அதன் தொடர்ச்சியாகவும் மாணவர் சேர்க்கை பள்ளிகளில் தீவிரமாக நடந்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 3 வாரத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையில் சுமார் 12 லட்சத்து 88 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இவற்றில் 1-ம் வகுப்பில் மட்டும் கிட்டத்தட்ட 2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சேர்ந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மாணவர் சேர்க்கை பள்ளிகளில் இந்த மாதம் இறுதி வரை நீடிக்கும் என்றே சொல்லப்படுகிறது. அந்த வகையில் பார்க்கும்போது அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்