மாநில உரிமைகள் பறிபோவதை தடுக்க சட்டரீதியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - தமிழக அரசுக்கு கி.வீரமணி வலியுறுத்தல்

மாநில உரிமைகள் பறிபோவதை தடுக்க சட்டரீதியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசிடம் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-10-07 20:06 GMT
சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இன்றைய ஆட்சியின் கீழ் தமிழ்நாடு பெயரளவில்தான் தமிழ்நாடாக இருக்கிறது. நடைமுறையில் பிற மாநிலத்தவரின் வேட்டைக்காடாகவும், பண்பாட்டு படையெடுப்பை பிற இனத்தவரும், மொழியாளரும் செம்மொழி தமிழை புறந்தள்ளி அதற்குரிய முக்கியத்துவத்தையும் தராது இந்தி, சமஸ்கிருத கலாசார திணிப்பை செய்துவருகின்றனர். தமிழ்நாடு அரசு இதனை கண்டும் காணாததுபோல் இருப்பதோடு, கடுமையான தனது எதிர்ப்பை மத்திய அரசிடம் வைத்து, மாநில உரிமைகளை காப்பதற்கு எந்த வித முயற்சியையும் எடுக்காத அரசாகவே நீடிப்பது மிகவும் வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியதாகும்.

தற்போது சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதிகளும் மிகுந்த வேதனையுடன் இதனை சுட்டிக்காட்டி இருக்கின்றனர். ஒரு மாநில அரசு கடமை தவறியது என்பதை எவ்வளவு நாசுக்காக ஐகோர்ட்டு சுட்டிக்காட்டும் அளவுக்கு தமிழ்நாட்டு ஆட்சி தமிழ் மக்கள் உரிமைகளை பலிபீடத்தில் வைப்பதை இனியாவது, காலந்தாழ்ந்த நிலையிலாவது உடனடியாக விழித்துக்கொண்டு ஆவண செய்ய முன்வரட்டும். இதற்கொரு முற்றுப்புள்ளி சட்டரீதியாக தமிழ்நாடு அரசு வைக்கவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்