ராம்விலாஸ் பஸ்வான் மறைவு: முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-09 05:23 GMT
சென்னை,

டெல்லி ஆஸ்பத்திரியில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

பிரபலமான மூத்த அரசியல்வாதியும், லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தேன்.

இவர் தொழில் துறை, வேதிப்பொருள் மற்றும் உரத்துறை, தகவல் தொலைத்தொடர்புத் துறை உள்ளிட்ட பல துறைகளில் மத்திய அமைச்சராகவும் பணியாற்றியவர். நாடாளுமன்றத்தில் தனது கருத்துகளை ஆழமாகவும், அறிவார்ந்த முறையிலும் பேசக்கூடியவர்.  கொள்கை மாறுபாடு கொண்ட பிற கட்சியினருடனும் அன்பாகப் பழகக்கூடிய பண்பாளர்.

'நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்' என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் ராம்விலாஸ் பாஸ்வான்.

ராம்விலாஸ் பாஸ்வானின் மறைவு அவர்தம் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், அவரது கட்சித் தொண்டர்களுக்கும், இந்தியாவுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்