விவசாயிகளின் நெல் முழுமையாக கொள்முதல் செய்யப்படுகிறது - திமுக தலைவருக்கு, அமைச்சர் காமராஜ் பதில்

விவசாயிகளின் நெல் முழுமையாக கொள்முதல் செய்யப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பதிலளித்துள்ளார்.

Update: 2020-10-16 04:13 GMT
சென்னை,

திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், அதிமுக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை முழுமையாக வாங்க மறுப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை எவ்வித உச்சவரம்பும் இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யவும், அதற்கு ஏற்றவாறு தேவையான எண்ணிக்கையில் நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்கவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள உணவுத்துறை அமைச்சர் காமராஜ், 2019-20 கொள்முதல் பருவத்தில் 2,135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து, அதன் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்துள்ளதாக கூறியுள்ளார். வழக்கமாக திறக்கும் 1,500 கொள்முதல் நிலையத்துக்கு பதிலாக 2,135 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் நெல் வரத்து உள்ள இடங்களில், கூடுதலாக ஒரு கொள்முதல் நிலையம் திறக்க ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கி உள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். எவ்வித உச்ச வரம்புமின்றி நெல் கொள்முதல் செய்வதாக தெரிவித்துள்ள அமைச்சர் காமராஜ், கள நிலவரம் அறியாமல் எதிர்கட்சித் தலைவர் குறை கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று சாடியுள்ளார்.

மேலும் செய்திகள்