துணைவேந்தர் சூரப்பாவை ‘டிஸ்மிஸ்’ செய்ய கவர்னருக்கு உடனடியாக பரிந்துரைக்க வேண்டும்-முதல்-அமைச்சருக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

துணைவேந்தர் சூரப்பாவை ‘டிஸ்மிஸ்’ செய்ய கவர்னருக்கு உடனடியாக பரிந்துரைக்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-10-16 21:21 GMT
சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க.வின் கடும் எதிர்ப்பு, தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணியின் சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் எழுச்சிமிகு போராட்டம் ஆகியவற்றிற்குப் பிறகு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், ‘அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை எனத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது’ என்று அறிவித்துள்ளது காலதாமதமானது என்றாலும், வரவேற்கத்தக்கது. அமைச்சர் இப்படி பேட்டி கொடுப்பதைவிட தமிழக அரசின் இந்த முடிவினை உடனடியாக மத்திய அரசுக்குக் கடிதம் வாயிலாக, வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

அரசின் கொள்கை முடிவில் தலையிட்டு தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, மிகப்பெரிய பிரச்சினையை உருவாக்கிய, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவை ‘டிஸ்மிஸ்’ செய்வதற்கு பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் தமிழக கவர்னருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாகப் பரிந்துரை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்