அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விதிகளை மீறினால் அரசு வேடிக்கை பார்க்காது- அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

Update: 2020-10-18 00:20 GMT
தர்மபுரி, 

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று தர்மபுரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு தகுதி தேவையில்லை என்கிற முடிவு தாமதமாக எடுக்கவில்லை. இந்த பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு தகுதி வழங்கப்பட்டால் மாணவர்களுடைய கல்வி உரிமையை பாதிக்கும். முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா போராடி பெற்று தந்த 69 சதவீத இடஒதுக்கீடு பறிபோகும் நிலை உருவாகும். மேலும் வெளிநாட்டு மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் நிலை ஏற்படும். மாணவர்களுக்கு நுழைவு தேர்வு நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்க வாய்ப்பு உள்ளது. இவை அனைத்தும் தமிழக மாணவர்களின் கல்வி உரிமையை பாதிக் கும். இதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இந்த உயர் சிறப்பு தகுதி தேவையில்லை என்று அறிவித்தோம். இதுதொடர்பாக ஏற்கனவே5 அமைச்சர்கள் அடங்கிய குழுவை முதல்-அமைச்சர் அமைத்தார். இதுதொடர்பாக அந்த குழு ஆராய்ந்து, ஆலோசனை நடத்தியது. இதைத்தொடர்ந்து தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு தகுதி தேவையில்லை என்கிற முடிவு எடுக்கப்பட்டது.

எனவே இதில் எந்தவித காலதாமதமும் இல்லை. இது கடந்த 2017-ம் ஆண்டு முதல் பேசப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. அரசை பொறுத்தவரை மாணவர்களுடைய கல்வி உரிமை, அவர்களின் நலன் மட்டுமே முக்கியம். மாணவர்கள் உயர்கல்வி உரிமையை பாதிக்கின்ற எந்த நடவடிக்கையும் அ.தி.மு.க. அரசு மேற்கொள்ளாது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, அவருடைய பணிக்காலத்தில் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். துணைவேந்தர் விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது.

ஏற்கனவே போராடி பெற்ற 69 சதவீத இடஒதுக்கீடு பறிபோகும் வகையிலும் மற்றும் மாணவர்களின் உரிமையை பாதிக்கின்ற வகையில் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்காது.இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

மேலும் செய்திகள்