பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பை முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-23 10:47 GMT
சென்னை,

விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பகுதியிலுள்ள ஒரு பட்டாசு ஆலையில் இன்று மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் படுகாயமடைந்த 3 பேர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு திமுக தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார். விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு தாம் அதிர்ச்சி அடைந்ததாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தீபாவளி காலத்தில் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பை முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அதிக நிதியும், காயமடைந்தோருக்கு உயர்தர சிகிச்சையும் வழங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்