அரசு விழாவில் பங்கேற்க சென்னை கலைவாணர் அரங்கம் புறப்பட்டார் அமித்ஷா

அரசு விழாவில் பங்கேற்பதற்காக கலைவாணர் அரங்கத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காரில் புறப்பட்டுச் சென்றார்.

Update: 2020-11-21 11:30 GMT
சென்னை,

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று சென்னை வந்துள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவர், இன்று மதியம் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைந்தார். 

விமான நிலையத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், தமிழக அமைச்சர்கள் பாஜக மூத்த, முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து விமான நிலையத்திலிருந்து எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்ல அமித்ஷா வந்து சேர்ந்தார்.

அங்கு அவரை அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து இன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக, தற்போது ஓட்டலில் இருந்து அமித்ஷா புறப்பட்டுள்ளார். பாதுகாவலர்களின் வாகனங்களுக்கு இடையில், சாலைகளின் இருபுறமும் கூடியிருக்கும் பாஜக தொண்டர்களை நோக்கி கையசைத்தவாறு எம்.ஆர்.சி. நகர் ஓட்டலில் இருந்து அமித்ஷா புறப்பட்டுச் சென்றார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் வந்து சேர்ந்துள்ளனர். இதனை தொடர்ந்து கலைவாணர் அரங்கிற்கு வருகை தரும் அமித்ஷா, அங்கு நடைபெறும் அரசு விழாவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

மேலும் செய்திகள்