3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: உயிரிழந்த தலில்சந்தின் உறவினர் திடீர் தற்கொலை

சென்னையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்த தலில்சந்தின் உறவினர் விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2020-11-24 06:53 GMT
பெரம்பூர்,

சென்னை சவுகார்பேட்டையில் நிதி நிறுவன அதிபர் தலில்சந்த் (வயது 74), அவருடைய மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல்குமார் (40) ஆகிய 3 பேரும் கடந்த 11-ந் தேதி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக ஷீத்தல்குமாரின் மனைவி ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ், அவரது நண்பர்களான விஜய் உத்தம், ரவீந்திரநாத்கர் ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தற்போது இவர்கள் 3 பேரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் தலைமறைவாக இருந்த ஜெயமாலா, அவரது மற்றொரு சகோதரர் விலாஷ், அவரது கூட்டாளி ராஜீவ் ஷிண்டே ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் செல்போன் சிக்னலை வைத்து டெல்லி ஆக்ராவில் வைத்து கைது செய்தனர். விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்ட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

இந்த சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தலில்சந்தின் உறவினர் விஜயகுமார் என்பவர் மீது ஜெயமாலா பாலியல் புகார் தெரிவித்திருந்தார். சென்னை ஆர்.கே. நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த விஜயகுமாரிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் அழைத்திருந்தனர். 

இந்நிலையில் இன்று தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து, விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பியுள்ள காவல்துறையினர், இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்