ஏ.ஆர்.ரகுமானின் தாயார் மறைவு: முதலமைச்சர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல்

ஏ.ஆர்.ரகுமானின் தாயாரின் மறைவுக்கு, முதலமைச்சர் பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-12-28 09:12 GMT
கோப்புப்படம்
சென்னை,

இரண்டு ஆஸ்கார் விருதுகள் மற்றும் பல விருதுகளுக்கும் புகழுக்கும் சொந்தக்காரர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டவரையும் தனது இசையின் மூலம் கட்டிப்போட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். புகழின் உச்சிக்கு சென்றாலும் எந்த கர்வமும் இல்லாமல், அமைதியாக இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் இன்று காலை அவரது இல்லத்தில் காலமானார். அவர் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் மறைவுக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் தாயாரின் மறைவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமானின் தாயாரின் மறைவு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில், “இசைத்துறையின் ஜாம்பவான் இசையமைப்பாளர் திரு.A.R.ரஹ்மான் அவர்களின் அன்புத்தாயார் திருமதி.கரீமாபேகம் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன். தாயாரின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் A.R.ரஹ்மான் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்!” என்று பதிவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூலில் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், “இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் தாயார் கரீமா பேகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!  தமிழில் தொடங்கி பல மொழிகளிலும் இசையமைப்பில் உச்சம் தொட்டு ஆஸ்கர் வரை உலகப் புகழினை பெற்றிடும் வகையில் ரகுமான் அவர்களை ஆளாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர் அம்மையார். தாயின் இழப்பில் துயர் அடைந்திருக்கும் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு ஆறுதல்!” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்