பவானிசாகர் அணை நீர்வரத்து நிலவரம்

இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.53 அடியாக உள்ளது.

Update: 2021-02-23 04:13 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. 

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 

இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 444 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 95.89 அடியாக இருந்தது. நேற்று காலை 8 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 96.24 அடியாக இருந்தது. 

இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.53 அடியாக உள்ளது. அணையில் இன்று 26 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது. பவானிசாகர் அணைக்கு தற்போது வரும் நீர்வரத்தின் அளவு 2,346 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

மேலும் செய்திகள்